🌿 ஆசையை துறப்பது என்றால் என்ன?
🌿 சுவாமி விவேகானந்தர்
🌿 எதற்கும் ஆசைப்படாதீர்கள். நம்மைத் துன்புறச் செய்வது எது? நமது துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் ஆசையே. நாம் ஒன்றை விரும்புகிறோம்; அதை அடைய முடியவில்லை. விளைவு? துன்பம். ஆசை இல்லாவிட்டால் துன்பமும் இல்லை.
🌿 இங்கேயும் நான் சொல்வதைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆகவே ஆசையைத் துறப்பது துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவது என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை இங்கே விளக்குவது அவசியம்.
🌿 சுவர்களுக்கு ஆசை கிடையாது, அவை துன்புறுவதும் இல்லை. உண்மைதான். ஆனால் அவை வளர்ச்சி அடைவதும் இல்லை. இந்த நாற்காலிக்கு ஆசைகள் இல்லை; அது துன்பம் அடைவதில்லை. ஆனால் அது ஒரு நாற்காலியாகத்தான் எப்போதும் இருக்கிறது.
🌿 ஆசைகள் தவறானவை என்பது நம் எல்லோருக்கும் புரிகிறது. ஆனால் ஆசைகளைத் துறப்பது என்றால் என்ன? ஆசையில்லாவிட்டால் வாழ்க்கை எப்படி நடைபெறும்? ஆசையை அழித்துவிடு-துன்பத்தைத் தீர்ப்பதற்கு இதுதான் வழி என்பது மனிதனையே கொன்று விடுவதற்குச் சமமாகும்.
🌿 தீர்வு இதுதான்: உங்களுக்குச் சொத்து கூடாது என்பதல்ல, உங்கள் தேவைக்குரியவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என்பதல்ல. ஏன், ஆடம்பர மானவற்றைக்கூட அனுபவிக்கக் கூடாது என்பது அல்ல. வேண்டியதை வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு மேலேயும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் உண்மையை அறிந்து கொள்ளுங்கள், உணர்ந்து கொள்ளுங்கள்.
🌿 செல்வம் யாருக்கும் சொந்தமானது அல்ல. சொந்தக்காரர்கள், முதலாளிகள் என்ற கருத்தை கைவிட வேண்டும். நீங்களும் ஒன்றுமில்லை, நானும் ஒன்றுமில்லை, யாராயிருந்தாலும் வெறும் பூஜ்யமே. எல்லாம் இறைவனுக்கே சொந்தம்.
. 🌿 நாம் அனுபவிக்கும் செல்வத்தில் இறைவன் இருக்கிறார். நம் மனத்தில் எழும் ஆசைகளில் அவர் இருக்கிறார். ஆசைகளைத் திருப்தி செய்வதற்காக நாம் வாங்கும் பொருட்களில் இருப்பதும் அவரே. நமது அழகான ஆடை அணிகளிலெல்லாம் இருப்பதும் அவரே. இப்படித்தான் நம் எண்ணம் இருக்க வேண்டும்.
🌿 இந்தக் கோணத்திலிருந்து உலகத்தைப் பார்க்க ஆரம்பித்தால், எல்லாமே வேறுவிதமாகத் தோன்றத் தொடங்கிவிடும். நமது ஒவ்வோர் அசைவிலும் ஒவ்வொரு பேச்சிலும் உருவத்திலும், ஏன், எல்லாவற்றிலுமே இறைவனை இணைத்துக் கொள்வோமானால் காட்சியே மாறிவிடும். உலகம் துன்பமும் துயரமும் நிறைந்த இடமாக இல்லாமல் சொர்க்கமாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்..
No comments:
Post a Comment